சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் தாம்பரம் சந்திப்பு மற்றும் தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை - எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் 4½ கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதனால் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது 7 மாதங்களுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு பயணித்து வந்தனர்.
இந்தநிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு பறக்கும் ரெயில் சேவை இன்று தொடங்கியது. இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி - கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதேநேரம், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை, மீண்டும் தொடங்கியுள்ள நிலையிலும், பூங்கா ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்களும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூங்கா நகர் ரயில் நிலையம், வெளியூர் செல்லும் ரயில்கள் இயக்கப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கான நிறுத்தமாக இருக்கும் நிலையில், அங்கு ரயில்கள் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் கோட்டை ரயில் நிலையம் சென்று மாறி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“