சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வருகிற ஜனவரி 6, 2022-ல் 45வது சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
45வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 6, 2022 முதல் ஜனவரி 23ம் தேதி வரை நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழா தொடங்கும் அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புத்தக கண்காட்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க உள்ளார். விழாவில், 2022ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
சென்னை புத்தகக் கண்காட்சி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.
இந்த புத்தகக் கண்காட்சி கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டு 800 அரங்குகள் இடம் பெறும். புத்தக் கண்காட்சியில் பார்வையிடுவதற்கு நுழைவுக் கட்டணம் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் வசூலிக்கப்படும். புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நுழைவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.
புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் மின்விசிறிகள் மற்றும் டிராலி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். வாசகர்கள் அனைவருக்கும் முகக்கவசம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினியும் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தனியாக சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். இந்த ஆண்டும், புத்தகத்திற்காக தனியாக பைகள் வழங்கப்படும். பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் புத்தக கண்காட்சியில் உணவகம் அமைக்க முன்வரலாம்” என்று தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”