கோரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி, தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் உணவு விநியோகிக்க தடை விதித்துள்ளது. அதே போல, அனைத்து டீ கடைகளையும் இன்று மாலை 6 மணியுடன் மூட உத்தரவிட்டுள்ளது.
கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ரேஷன், பால், உணவகங்கள், மளிகை, காய்கறி அங்காடிகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து போக்குவரத்து, அலுவலகங்கள், என அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முதலில் வெளியிட்ட உத்தரவில் டீக்கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அதே போல வீடுகளுக்கு உணவு விநியோகிக்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பலரும் டீக்கடைகளில் கூட்டமாக கூடுவது நடந்து வந்தது. அதோடு, தனியார் நிறுவனங்கள் வீடுகளில் உணவு விநியோகிப்பதன் மூலம் விநியோகிப்பவர்களின் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால் சென்னையில் தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் வீடுகளில் உணவு விநியோகிக்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. அதே போல, சென்னையில் உள்ள அனைத்து டீக்கடைகளையும் இன்று (மார்ச் 25) மாலை 6 மணிக்கு மூட உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், மளிகை, காய்கறிகள் வீடுகளுக்கு விநியோகிக்க அனுமதி அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு மூலம், சென்னையில் இன்று மாலை 6 மணியுடன் அனைத்து டீக்கடைகளும் மூடப்படும். தனியார் உணவு விநியோக்கிக்கும் நிறுவனங்கள் வீடுகளில் உணவு விநியோக்க தடை செய்யப்படுகிறது.