/indian-express-tamil/media/media_files/2025/05/26/YWa4FRRFczhTXSlMB1S2.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 17, 2025 21:39 IST
சென்னை விமான நிலையம் அருகே லேசர், பலூன்களை பயன்படுத்த தடை
சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விமான நிலைய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Jun 17, 2025 20:55 IST
தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த ஆண்டு தெரிவிப்போம் - பிரேமலதா
தே.மு.தி.க-வை வளர்க்கும் பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும், கூட்டணி குறித்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் தே.மு.தி.க கூட்டணி குறித்து உறுதியாக தெரிவிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 17, 2025 20:43 IST
சென்னை மெட்ரோ கட்டுமான விபத்து - நாளை அறிக்கை தாக்கல்
சென்னை, ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமான விபத்து தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 26 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Jun 17, 2025 20:18 IST
600-க்கும் மேற்பட்டோர் அஜர்பஜைனாக்கு தப்பிச் சென்றதாக தகவல்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான தாக்குதல் தொடங்கியதில் இருந்து கடந்த ஐந்து நாட்களில், 17 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மக்கள் ஈரானிலிருந்து அஜர்பைஜானுக்கு தப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, செர்பியா, ருமேனியா, போர்ச்சுகல், சீனா, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், ஜார்ஜியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
-
Jun 17, 2025 20:04 IST
மாநில அளவில் கைப்பந்து போட்டி: திருப்பத்தூரில் தொடங்கி வைத்த உதயநிதி
சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கழகத்தின் சார்பில் சார்பு அணிகளோடு கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து திருப்பத்தூர் அண்ணா சாலை அருகே இருந்து வரும் செம்மொழிப் பூங்காவில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மின்னொளி கைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டியினை தொடங்கி வைத்தார்.
-
Jun 17, 2025 19:37 IST
சென்னையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்
சென்னையில், பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தரும் தானியங்கி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவில் நடைபெறும் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
-
Jun 17, 2025 19:29 IST
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை - பள்ளி கல்வித்துறை
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கல்வியாண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.
-
Jun 17, 2025 19:07 IST
டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாடு
வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே டாஸ்மாக் கடை இருந்து, அதற்கு ஆட்சேபனை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
Jun 17, 2025 19:06 IST
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - தேவாலய ஊழியர் கைது
சென்னை அம்பத்தூரில், பிரார்த்தனைக்கு வந்த சிறுவர்களிடம் நட்பாக பழகி பாலியல் தொல்லை கொடுத்தாக தேவாலய ஊழியர் ஏசுதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். போக்சோ வழக்கு பதிவு செய்தும், 3 தனிப்படை அமைத்தும் ஏசுதாஸை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
-
Jun 17, 2025 19:03 IST
ஈரானுக்குள் இஸ்ரேலிய உளவாளிகள் ஊடுருவல் - ஈரான் அரசு எச்சரிக்கை
இஸ்ரேலிய உளவாளிகள் ஊடுருவி உள்ளதாக அந்நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. முகமூடி, கண்ணாடி அணிந்து கொண்டோ நடமாடும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க ஈரான் அறிவுறுத்தியுள்ளது.
-
Jun 17, 2025 19:02 IST
மும்பை - சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிவு
இன்றைய நாள் தொடக்கத்திலிருந்தே சரிவுடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சரிவுடனேயே முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிந்து 81,583 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் குறைந்து 24,853 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
-
Jun 17, 2025 18:48 IST
ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவர் கமேனிக்கு ஏற்படும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தலைநகரான டெஹ்ரானில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேஸ் அறிவுறுத்தியுள்ளது.
-
Jun 17, 2025 18:46 IST
சிறுவன் கடத்தல் வழக்கு - ஏ.டி.ஜி.பி ஜெயராமிடம் விசாரணை நிறைவு
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. போலீசாரின் விசாரணைக்கு ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆள் கடத்தல், குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஏ.டி.ஜி.பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராம், விசாரணைக்குப் பின் தனது சொந்த காரில் ஏறிச் சென்றார்.
-
Jun 17, 2025 18:42 IST
வெளிநாடு தப்ப முயன்ற முன்னாள் அமைச்சர் மகன் கைது
வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும், தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜாவை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
சகோதரியிடம் ரூ.17 கோடியிலான 2 ஏக்கர் நிலம், 300 சவரன் நகையை மோசடி செய்ததாக ராஜா மீது புகார் எழுந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமறைவாக உள்ள ராஜாவின் மனைவி அனுஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
Jun 17, 2025 18:39 IST
அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160.8 கோடி சொத்து பறிமுதல்
சட்டவிரோத ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக நாடு முழுவதும் 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.160.8 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சென்னை, மும்பை, டெல்லி, குர்கான் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
Jun 17, 2025 17:26 IST
சத்துணவில் புழு-இதுதான் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன்
“சத்துணவில் புழு-இதுதான் திராவிட மாடலா?” சத்துணவில் புழு நெளிவதாக மாணவர்கள் கூறுவதுதான் திராவிட மாடலா முதல்வரே?
மேலும், அடிப்படை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அவலங்களால் அரசு பள்ளிகள் சீரழிவு; சத்துணவிலும் ஊழல் செய்து, படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிப்பது கண்டனத்துக்குரியது. பள்ளிக்கூடத்தில் சத்துணவில் புழு என குழந்தைகள் பேசும் வீடியோவை பகிர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 17, 2025 16:45 IST
அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து
அகமதாபாத்-லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் ஏர்இந்தியா விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த ஆய்வின்போது, தொழில்நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்தே, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
-
Jun 17, 2025 16:37 IST
அமைச்சர் மா. சு மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை 24-ல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் என சென்னை சிறப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 17, 2025 16:30 IST
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம்
கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது சர்ச்சையானது.
-
Jun 17, 2025 16:29 IST
”கீழடி அகழாய்வு விவகாரத்தில் உண்மை வெல்லும்”
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம். கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். மத்திய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
Jun 17, 2025 16:27 IST
விபத்தில் பலி - நிவாரணத் தொகை அதிகரிப்பு
பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.
-
Jun 17, 2025 16:03 IST
"திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை"
கீழடி அகழாய்வு முடிவுகள் தொடர்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை. நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்தி அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Jun 17, 2025 15:24 IST
ஜூன் 21ல் சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
பயணிகள் நலன் கருதி ஜூன் 21ல் சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜூன் 21 இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் சிறப்பு ரயில் (06089) புறப்படும்: மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (06090) நெல்லையில் இருந்து ஜூன் 22 இரவு 9.40க்கு புறப்படும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 18ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
-
Jun 17, 2025 15:15 IST
ரூ.17 கோடி மோசடி-முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் கைது
ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகநாதன் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சண்முகநாதனின் மகன் ராஜாவை சென்னை மத்தியப் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. சண்முகநாதன் மகன் ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன
-
Jun 17, 2025 15:14 IST
மதுரை எய்ம்ஸ் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால், கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை வந்த அமித் ஷா, எய்ம்ஸ் என்ன ஆனது என சென்று பார்த்தாரா என கேட்டிருந்தேன். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்து விட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
-
Jun 17, 2025 14:54 IST
"தமிழ்நாட்டில் கள் போதைப்பொருளானது எப்படி?''
புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி? தமிழர் வாழ்வியலோடு கலந்தது பனைமரம்; பரம்பரையாக பின்பற்றப்படும் தொழில் அது நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தால், விசாரணையை எதிர்கொள்ளத் தயார்; சாராய ஆலையைத் திறந்தால் நியாயம், நாங்கள் பனை மரம் ஏறினால் குற்றமா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
Jun 17, 2025 14:25 IST
கடந்த தேர்தலின் போது அதிமுக நம்மை மதிக்கவில்லை: தேமுதிக நிர்வாகிகள் புகார்
கடந்த தேர்தலின் போது அதிமுக நம்மை மதிக்கவில்லை என தொகுதி வாரியாக நடைபெறும் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதாவிடம் தேமுதிக நிர்வாகிகள் புகார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் இருந்த போது அதிமுகவினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. செலவுக்கு சரியாக பணம் கூட கொடுக்கவில்லை. எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேளுங்கள் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
-
Jun 17, 2025 14:07 IST
கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இட மாற்றம்
கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்டார். டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது சர்ச்சையானது.
-
Jun 17, 2025 13:53 IST
ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு எங்கே போகிறது? - இ.பி.எஸ் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80 வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர்
மு.க. ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை. 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த தி.மு.க அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 17, 2025 13:47 IST
திருத்த வேண்டியது கீழடி அறிக்கையை அல்ல; சில உள்ளங்களை - ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு: “எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
நாளை மதுரை வீரகனூரில், தி.மு.க மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 17, 2025 13:40 IST
‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு தடை விதிப்பது ஏற்ப்புடையதல்ல - சுப்ரீம் கோர்ட் கருத்து
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் "தக் லைஃப்" திரைப்படத்திற்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் கருத்து: "தக் லைஃப்" திரைப்படத்தை தடை செய்வது ஏற்கத்தக்கதல்ல என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. "சிலர் பயமுறுத்துவதால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதை ஏற்க முடியாது; படம் வெளியான பிறகு பொதுமக்கள் படத்தைப் வந்து பார்க்காமல் இருக்கலாம்; அதற்காகப் படத்தை தடை செய்வது ஏற்கப்படக்கூடியது அல்ல; நமது வீதிகளைக் குண்டர்கள் கைப்பற்ற அனுமதிக்க முடியாது," என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
-
Jun 17, 2025 13:35 IST
அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து
அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. விமான விபத்துக்குப்பிறகு, முதல்முறையாக சேவை அறிவித்த நிலையில் விமானம் ரத்து செய்யப்பட்டது.
-
Jun 17, 2025 13:32 IST
கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம்
கீழடி அகழ்வாரய்சியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்ற்ம் செய்ய்ப்பட்டுள்ளார். அண்மையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையை மத்திய அரசு திருத்தம் செய்யக் கோரியிருந்தது. இந்த அறிக்கை அறிவியல் பூர்வமானது திருத்தம் செய்ய முடியாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
Jun 17, 2025 13:16 IST
டாஸ்மாக் முறைகேடு: ஆகாஷ் பாஸ்கரன் - ஆவணங்களை தாக்கல் செய்ய இ.டி.க்கு ஐகோர்ட் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jun 17, 2025 13:10 IST
சென்னையில் சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. அன்புவின் மகள் சென்ற கார் மீது தாக்குதல்
சென்னை சூளைமேடு பகுதியில் சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. அன்புவின் மகள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போதையில் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் (26) என்பவர் கைது செய்யப்பட்டார். தாக்குதலில் ஐ.ஜி.யின் மகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 17, 2025 12:33 IST
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது; கர்நாடக ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
"கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஒரு திரைப்படம் தடையில்லா சான்று பெற்றிருந்தால், எந்த பிரச்சினையும் இல்லாமல் திரையிட அரசு உறுதி செய்ய வேண்டும்., 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 17, 2025 12:30 IST
சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீஸ் வீசாரணை
சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் டி.எஸ்.பி தமிழரசி, ஆய்வாளர் நரேஷ் விசாரணை நடத்தினார். இதனால், காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Jun 17, 2025 12:22 IST
கமல்ஹாசனை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது; கர்நாடக ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
தக் லைஃப் வழக்கில் கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது; கமல்ஹாசன் மனிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர் நீதிமன்றத்தின் வேலை அல்ல; உயர் நீதிமன்றம் எப்படி அப்படிக் கூறலாம்? என கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Jun 17, 2025 11:48 IST
இஸ்ரேலின் ட்ரோன் தொழிற்சாலையை அழித்த ஈரான்
இஸ்ரேலின் ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக ஈரான் அறிவித்துள்ளது. டெஹ்ரானில் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 200 கிலோ வெடிபொருட்கள், ட்ரோன் தயாரிக்க உதவும் சாதனங்கள், லாஞ்சர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
Jun 17, 2025 11:43 IST
ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Jun 17, 2025 11:14 IST
15 மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னையில் மாநகர பேருந்தின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
-
Jun 17, 2025 11:04 IST
ஏ.டி.ஜி.பி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏ.டி.ஜி.பி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி ஜெயராமின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது
-
Jun 17, 2025 10:43 IST
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக்கூடும். இந்தநிலையில், தென்மேற்கு வங்கதேசம், அதனை ஒட்டிய மேற்குவங்கத்தில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த 2வது காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jun 17, 2025 10:16 IST
ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜர். முன்ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
-
Jun 17, 2025 10:15 IST
ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
Jun 17, 2025 09:32 IST
விஞ்ஞானி நெல்லை முத்துவின் உடலுக்கு அஞ்சலி
விஞ்ஞானி நெல்லை முத்துவின் உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை கலைநகரில் உள்ள அவரது மகள் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
Jun 17, 2025 08:50 IST
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் வழக்குத் தொடா்பாக திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி மற்றும் திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அவா் அளித்த வாக்குமூலத்தை எழுத்து பூா்வமாகவும், விடியோவாகவும் பதிவு செய்தனா். தொடர்ந்து நேற்று நள்ளிரவே நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்ட ஜெயராமை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
-
Jun 17, 2025 08:50 IST
துணை மருத்துவப் படிப்பு: விண்ணப்ப விநியோகம்
துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குகிறது என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
Jun 17, 2025 08:28 IST
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. 4 நாட்களுக்குப் பிறகு மழையின் தாக்கம் இன்று குறைந்துள்ளதால், பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.
-
Jun 17, 2025 07:54 IST
தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு
வெள்ளப்பெருக்கு காரணமாக தென்காசி குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை , 3வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.