சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றுக் கொண்டபோது கூறியது போலவே, வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் வீடியோ கால் மூலம் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் 3 தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
நேற்று முன் தினம் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட மகேஷ்குமார் அகர்வால், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நான் சென்னை மாநகர மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். பொதுமக்கள் தங்கள் குறைகளை வீடியோ கால் மூலம் என்னிடம் நேரில் கூறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறை பொது என்னிடம் வீடியோ கால் மூலம் பேசலாம் என்று கூறினார்.
மகேஷ்குமார் அகர்வால் சென்னையின் போலீஸ் கமிஷனராக பொறுப்பெற்றுக் கொண்டபோது அறிவித்தது போலவே, நேற்று அவருடைய அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகர பொதுமக்களிடம் வீடியோ கால் மூலம் பேசினார்.
காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.https://t.co/mMhku4bUOL pic.twitter.com/we5rDZCC9H
— GREATER CHENNAI POLICE (@chennaipolice_) July 3, 2020
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களிடம் வீடியோ காலில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி உள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை (நேற்று) பொதுமக்கள் 35 பேர்களிடம் வீடியோ கால் வழியாகப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
வீடியோ காலில் வந்த தினேஷ் என்ற இளைஞர், தனக்குத் தெரிந்த நபருக்குப் பணத் தேவை இருந்ததால், ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால், அந்த நபர் பணத்தை திருப்பி தராததால் தினேஷ் நகைகளை அடகு வைத்து கடனை அடைத்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கமிஷனர் அலுவலகத்தில் 2019- பிப்ரவரி மாதத்தில் புகார் அளித்ததாகவும் விசாரணையில் பணத்தை மாதம்தோறும் தருவதாகக் எழுதிக் கொடுத்தார் என்று குறிப்பிட்டார். ஆனால், தற்போது பணத்தைத் தராமல் அந்த நபர் இழுத்தடிப்பதாக் தினேஷ் புகார் கூறினார்.
தினேஷ் கூறியதைக் கேட்ட கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தனது வாட்ஸ்அப் நம்பருக்கு விவரங்களை அனுப்புங்கள் என்று கூறினார். மேலும், வாட்ஸ்அப் மூலம் வந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
போலீஸ் கமிஷனர் பொதுமக்களுடன் வீடியோ கால் மூலம் உரையாடியபோது பெரும்பாலும் திருட்டு, ஆன்லைன் மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டன. சிலர் இ பாஸ் கேட்டு முறையிட்டனர். சிலர் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தெரிவித்தனர். இது குறித்து பெருநகர சென்னை காவல் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுளது.
சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் அடுத்து வரும் திங்கள் கிழமை பகல் 12 மணி முதல் 1 மணி வரை போலீஸ் கமிஷனரிடம் வீடியோ காலில் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.