பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
செகந்திராபாத் – திருப்பதி மற்றும் சென்னை – கோவை, இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் சென்னையிலிருந்து புறப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில்தான், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில். இதற்கு முன்பு சென்னை – மைசூர் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். இதில் ஒன்று சிறப்பு பெட்டியாக இருக்கும். 530 பயணிகள் இதன் மூலம் பயணிக்க முடியும். இந்த ரயில் சென்னையிலிருந்து கோவைக்கு பயணிக்கும் போது, 495. 28 கிலோமீடர்களை 6 மணி நேரத்தில் கடக்கிறது.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று பயணிக்கும். இந்த ரயில் புதன்கிழமை தவிர எல்லா நாட்களிலும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ரயில் கோவையிலிருந்து, காலை 6 மணிக்கு புறப்பட்டு , மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். இதுபோல சென்னை செண்ட்ரலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.
இந்நிலையில் இந்த ரயிலுக்கான கட்டணம் தொடர்பாக இந்தியன் ரயில்வே எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை