சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் (60), கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி, நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் மொத்தமாக தற்போது 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.