சென்னையில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 80% மாக அதிகரித்தது. மிகவும் மோசமாக பாதிப்படைந்த தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் குணமடைவோர் விகிதம் கடந்த நாட்களில் அதிகரித்தன் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களில் ஆலந்தூர், அடையார், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் மட்டும் கொரோனா வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது .மற்ற அனைத்து மண்டலங்களிலும் கொரோனா நோய்த் தோற்று வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது 14,923 பேர் மட்டுமே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். நோய்த் தோற்று சிகிச்சை பெற்று வந்த 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையின் மொத்த இறப்பு விகிதம் 1.36% என்ற எண்ணிக்கையில் உள்ளது.
சென்னையில் திருவொற்றியூர் மண்டலத்தில், குணமடைவோர் விகிதம் 81% மாக இருந்தாலும், இறப்பு விகிதம் மற்ற மண்டலங்களை விட அங்கு மிக அதிகமாக உள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற மண்டலங்களை விட அதிகமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் இங்கு மற்ற மண்டலங்களை விட குறைவாக உள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் கிட்டத்தட்ட 88% கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மருத்துவ சிகிச்சையில் இருக்கும் எண்ணிக்கை 9% மாகவும், இறப்பு விகிதம் 2.19% மாகவும் உள்ளது.
81% குணமடைவோர் விகிதத்தைக் கொண்ட சோழிங்கநல்லூர் மண்டலத்தில் குறைந்த அளவிலான கொரோனா உயிரிழப்புகள் (12) பதிவாகியுள்ளன. இருப்பினும், கடந்த ஏழு நாட்களில் கொரோனா பாதிப்பின் வளர்ச்சி இந்த மண்டலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில், வளசரவாக்கம் மண்டலம் கடந்த ஏழு நாட்களில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் அங்கு நோய் பாதிப்பு வளர்ச்சி விகிதம் மைனஸ்(-) 5.3 சதவீதமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 81% பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

சென்னையில் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தியதன் விளைவாக சென்னை பெருநகர் பகுதிகளில் சமீபத்திய நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil