சென்னை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலராக இருந்த ஏ.ஸ்டாலின் என்பவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க வின் சென்னை தெற்கு மாவட்ட மதுரவாயல் வடக்கு பகுதி 144-வது வட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஏ.ஸ்டாலின்.
இந்நிலையில், கவுன்சிலர் ஸ்டாலின் வார்டு பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் நிலையம் அமைக்கும் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144-வது வட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“