மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விபத்தையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், கார் ஓட்டுநர், நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதியதாக கூறினார்.
இதனையடுத்து நடந்தது விபத்து என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்த நிலையில் புகாரின் பேரில் தற்போது மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதீனம் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.