அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, நேற்று (வியாழக்கிழமை, ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்தனர்.
மருத்துவர் அருண் பிரசாத் அளித்த பேட்டியில், "பகல் 1.30 மணியளவில் 5வது மாடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பெரிய சத்தம் கேட்டது. புகை சூழ்ந்ததால் முதல் மாடிக்கு ஓடி, கட்டிடத்தில் இருந்து குதித்து தப்பினேன். கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த பிறகே விமான விபத்து எனத் தெரிந்தது. விமான விபத்தின்போது திடீரென எங்கும் புகை பரவியது. நாங்கள் வெளியே வந்த 15-20 நிமிடங்களுக்குப் பின் மீட்புப்பணிகள் நடந்தன" என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தின் மேகனிநகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதிக் கட்டிடத்தில் வியாழக்கிழமை மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் தவிர, நான்கு மருத்துவ மாணவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர்.
"விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ மாணவர்களின் விடுதி, மருத்துவமனையின் ஊழியர் குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. பலத்த காயமடைந்தனர்... சுமார் 50 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சீரான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று துவிவேதி முன்னதாக தெரிவித்தார்.
"விமானம் விடுதியின் உணவு உண்ணும் கூடத்தில் விழுந்தது, அங்கு மக்கள் இருந்தனர். அவர்களில் பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்று பிடிஐ செய்தி அறிக்கை ஒரு சாட்சியைக் குறிப்பிட்டுள்ளது.