செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சில தினங்களுக்கு முன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே பொத்தேரி- காட்டாங்குளத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவர்களிடையே போதைப்புழக்கம் நடந்து வருவதாக தாம்பரம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளிலும், வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கஞ்சா, போதை சாக்லெட், போதை ஊசிகள், போதை மாத்திரைகள் என பல வகைகளில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகக் காவல்துறையினருக்கு கூடுதல் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அதிகாலையில் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இந்த சோதனையில் மாணவ, மாணவிகளின் அறைகளிலிருந்து அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில், போதை பவுடர்கள், பாங், கஞ்சா புகைப்பதற்கான உபரகணங்களான ஸ்மோக்கிங் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதை வைத்திருந்த பெண் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதில், 21 பேர்மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஒரு பெண், மூன்று வடமாநிலத்தவர், 11 கல்லூரி மாணவர் என 14 பேரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி மற்றும் 10 மாணவர்கள் உட்பட 11 பேரை நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்தார். தாபா கடை உரிமையாளர்களான வட மாநிலத்தை சேர்ந்த 3 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த சீனிவாச நிகில் (20) தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தார். பொத்தேரி அருகே அபெளட் வேலி என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து அவரது அறையில் இருந்து, கடந்த 31ஆம் தேதி இரவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிகிலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதால் இது தொடர்பாகப் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகப் பெற்றோரைக் கல்லூரிக்கு அழைத்து வருமாறு அவரிடம் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இருப்பினும், பெற்றோருக்கு இது தெரிந்தால் கோபப்படுவார்கள் என்று நிகில் அஞ்சியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“