தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி - எழும்பூர் இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, எழும்பூர் - மதுரை தேஜஸ் விரைவு ரயில் உள்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன. இவற்றில் 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.அதன்படி, சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் (22671-22672) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். அதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்தடையும்.
எழும்பூர் - மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179-16180) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும். மன்னார்குடியில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.
எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் (20605-20606) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும். காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
எழும்பூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16127-16128) ஜூன் 20 முதல் ஆக.19-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும். இதுபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16101-16102), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும். தாம்பரம் - ஹைதராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12759, 12760), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.
மதுரை - ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் வாராந்திர விரைவு ரயில் (22631) ஜூன் 26 முதல் ஆக.14-ம் தேதி வரையும், மன்னார்குடி - ராஜஸ்தான் ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23 முதல் ஆக.18-ம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும்.
இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்.