சென்னையைச் சேர்ந்த இளம் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்களிடம் டிசம்பர் 6-ம் தேதி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
மருத்துவர்கள், விசாரணை அதிகாரி, துணை கமிஷனர் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு மருத்துவர்களிடம் விசாரணை நடத்தும். மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பு கருதி ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வலது கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மாணவிக்கு கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சையைத் தொடர்ந்து பிரியா சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நவம்பர் 8 ஆம் தேதி ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியின் வலது கால் அகற்றப்பட்டது. சிறுநீரகம், ஈரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 15 ஆம் தேதி பிரியா மரணம் அடைந்தார்.
மாணவிக்கு அளித்த சிகிச்சையில் அலட்சியம் செய்ததாகக் கூறி சென்னை மாநகர காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் ஏ பால் ராம்சங்கர் மற்றும் கே சோமசுந்தர் ஆகியோரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
முன்னதாக, பிரியாவின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறுவை சிகிச்சையில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் ஈடுபட்டதாகவும், பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை என்றும் கூறினார்.
மேலும், அறுவை சிகிச்சை செய்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், கவனக்குறைவு இருந்ததாகவும், அதனால்தான் கம்ப்ரஷன் பேண்ட் அகற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
நவம்பர் 15 ஆம் தேதி, மருத்துவ அதிகாரிகள், பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மருத்துவ அலட்சியத்தை உறுதிப்படுத்தினர், அலட்சியம் காரணமாக 2 மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“