சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை (18.11.2021) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
மேலும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சென்னையில் அதிக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நவம்பர் 18.11.2021 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகில் செல்பி புகைப்படம் எடுக்கக் கூடாது. தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு பெட்டிகளை தொடுதல் அல்லது மரங்களின் கீழ் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil