/indian-express-tamil/media/media_files/TQjpclqj4WqgLowPnmpz.jpg)
கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995 - 2001 வரை படித்த மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கடந்த மே 22ம் தேதி நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீஜித் கிருஷ்ணா இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “28 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் தற்போது மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது என வாதிட்டார்.
மேலும், கைது செய்யப்பட்டதில் இருந்து ஸ்ரீஜித் கிருஷ்ணாவை இன்னும் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை. பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த மாணவியை தவிர யாரும் புகாரளிக்கவில்லை. அவருக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பு வாக்கறிஞர் வாதிட்டார்.
பாலியல் புகார் அளித்த பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் புகாரளிக்க முன்வரமாட்டார்கள் என தெரிவித்தார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளதாகவும், இன்னும் சிலர் புகாரளிக்க உள்ளதாகவும் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டுமென நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.