செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்தார். இதனால், தமிழ்நாடு அரசு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என ஜூன் 16-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரக்கூடாது எனக் கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன், அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என தமிழக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேவலு அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், 'குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க அரசியல் சட்டமும் சட்ட விதிகளும் தடை விதிக்கவில்லை' என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜியால் அரசுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும், அதனால், ஆளுநர் சட்ட விதிகளின்படி செயல்பட்டிருக்கிறார் என வாதங்களை முன்வைத்தனர்.
மனுதாரர்கள் மறும் தமிழ்நாடு அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தீப்பை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேவலு அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.
அதே நேரத்தில், செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல என்றும் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முடித்து வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“