/indian-express-tamil/media/media_files/RvBgfsjD1lxbBQUSmrmt.jpg)
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையைத் தடுக்கும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனை வழங்குவதை தடை செய்யக்கூடிய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனைகளை வழங்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், “தண்டனை எந்தவிதத்திலும் ஒரு குழந்தையை நல்வழிப்படுத்தாது எனவும் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர் அனுமதிப்பதுடன், அவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், குழந்தைகளைக் கண்காணிக்கலாமே தவிர, அடக்கக் கூடாது எனவும் உலக அளவில் குழந்தைகள் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்துவது முக்கியமானது என்று குறிப்பிட்ட நீதிபதி, பள்ளிக் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை ஒழிக்க வகை செய்யக்கூடிய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விதிகளைப் பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.