Advertisment

கோயில் நகைகளை உருக்குவதற்கு தடை… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுகிறது. ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.11.5 கோடி வட்டி வருமானமாக கிடைத்து வருகிறது.

author-image
WebDesk
New Update
கோயில் நகைகளை உருக்குவதற்கு தடை… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது, கோயில் உபரி நிதியில் கல்லூரி தொடங்குவது உள்பட 112 அறிவிப்புகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை, டி.ஆர்.ரமேஷ் ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இன்று, இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளின்படி கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "கோயில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுகிறது. ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.11.5 கோடி வட்டி வருமானமாக கிடைத்து வருகிறது. அது கோவில் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது" எனக் கூறினர். இதையடுத்து, நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், "கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது" என்றும் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கினை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment