மாதவரம் தாலுகா அலுவலத்திற்கான வாடகை கட்டிடத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை வருவாய் துறை செயலாளர் திருவள்ளுர் ஆட்சியர் மாதவரம் தாசில்தார் ஆகியோருக்கு ஊதியம் வழங்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் மாதாவரம் தாலுகா அலுவலத்திற்கு ராசிமண்டபத்தில் உள்ள பரிதாசவுகத் என்பவருக்கு சொந்தமான வீடு வாடகைக்கு பேசப்பட்டது. மாதம் ஒரு லட்சத்து இருபதாயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு வருவாய்துறை அலுவலர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து கடந்த 2009 ம்ஆண்டு அலுவலகம் அமைத்துக்கொண்டனர்.
வாடகை ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத நிலையில் பொதுப்பணித்துறை 98 ஆயிரத்து 925 ரூபாய் வாடைகை நிர்ணயித்தது. ஆனால் நிர்ணயித்த தொகையும் வாடகையாக வழங்கப்படவில்லை. இதையடுத்து மனுதாரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கின்படி மே 2016 வரை வீட்டின் உரிமையாளருக்கு வாடகை வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இந்தநிலையில் கட்டிட உரிமையாளர் பரிதா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் கடந்த ஓராண்டாக வாடகை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது, வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளாமல் 65 வயது மூதாட்டியை அலைகழித்து உள்ளார். எனவே முப்பது நாட்களில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்றும் மே மாதம் முதல் உள்ள வாடகை பாக்கியை 30 நாளில் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
வாடகை ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் காலம்தாழ்த்திய வருவாய்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர், தாலுகா தாசில்தார் ஆகியோரது ஊதியத்தை ஒப்பந்தம் மேற்கொள்ளும்வரை வழங்க கூடாது என்றும் ஒப்பந்த மேற்கொண்ட பின்னரே ஊதிய பாக்கியை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.