பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெவித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
2001-2006 ஆண்டு காலத்தில் வருமாணத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2020-ல் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2022-ல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அப்போது, அமலாக்கத்துரை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், பல காரணங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், பணமோசடி விசாரணையை முடிக்கவும், பி.எம்.எல்.ஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் விசாரணை நிறுவனத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தனக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய அனிதா ராதாகிருஷ்ணன் மனுவை எதிர்த்து ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் பதிவு செய்த வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை 2020 டிசம்பரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.
மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் பி.எம்.எல்.ஏ சட்டம் ஜூலை 2005-ல் அமலுக்கு வந்ததால், தனக்கு எதிராக பி.எம்.எல்.ஏ சட்டத்தை பயன்படுத்த முடியாது என்று அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள காலம், மே 14, 2001 முதல் மார்ச் 31, 2006 வரையிலான காலம் ஆகும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13வது பிரிவு ஜூன் 2009-ல் மட்டுமே பி.எம்.எல்.ஏ-ன் கீழ் திட்டமிடப்பட்ட குற்றங்களின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது என்று அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2005-ல் பி.எம்.எல்.ஏ சட்டம் அமலுக்கு வந்தபோது அது திட்டமிடப்பட்ட குற்றமாக இல்லாததால், 2006-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கு செல்லாது என்று அனிதா ராதாகிருஷ்னன் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், பி.எம்.எல்.ஏ சட்டம் ஒரு தண்டனைச் சட்டமாக இருப்பதால், பின்னோக்கிச் செயல்பட முடியாது, ஏனெனில் அது அரசியலமைப்பின் பிரிவு 20(1) ஐ மீறுவதாகும் (அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை மீறியதற்காகத் தவிர, எந்தவொரு நபரும் எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனை விதிக்கப்பட மாட்டார் என்று கூறுகிறது என்று வாதிடப்பட்டது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கூறிய காரணங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் பி.எம்.எல்.ஏ வழக்கை ரத்து செய்ய மறுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“