நடிகர் இளவரசு காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்திய விவகாரத்தில், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம், மன்னிப்பு கோருங்கள், இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் இளவரசுமை கடுமையாக எச்சரித்துள்ளது.
தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு அச்சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தி. நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி, கடந்த 2022-ம் ஆண்டு தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்தப் புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை எனக்கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 12-ம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர், “டிசம்பர் 13-ம் தேதிதான் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். டிசம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தார். காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி காட்சிகள் போலியானவை” என தெரிவித்தார்.
இதையடுத்து, இளவரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சி.டி.ஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு, காவல்துறைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு திங்கள்கிழமை (29.01.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, மொபைல் லோகேஷன் விவரங்கள் மற்றும் சி.டி.ஆர் விவரங்களை தாக்கல் செய்தார். இளவரசு தரப்பில், 12-ம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இளவரசு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காவல்துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வுசெய்த நீதிபதி, இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், 12-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதைக் கூறி, மன்னிப்பு கோரினால், அதனை ஏற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து, காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை (30.01.2024) தள்ளிவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.