Cyclone Gaja and TN Weather: கஜ புயலில் சிக்கிய டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீள முடியாமல் தத்தளிக்கின்றன. மின் வசதி, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றுக்காக மக்கள் அல்லாடுகின்றனர்.
கஜ புயலைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கனமழை நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்தார் சென்னை மாவட்ட ஆட்சியர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் பகுதிகளில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வேலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. கஜ புயல் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் நாகையில் உள்ள பள்ளிகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க : முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி ?
தொடர் மழை மற்றும் விடுமுறை காரணமாக அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து கல்லூரி முதல்வர் ராவணன் அறிவித்துள்ளார்.
நவம்பர் 16-ம் தேதி கஜ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் இன்னமும் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கு நிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பொழிவது நிவாரணப் பணிகளை தாமதப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு அடிப்படை தேவைகளுக்கு மக்கள் அல்லாடி வருகிறார்கள்.
Tamil Nadu Weather Today, Cyclone Gaja: கஜ புயல் நிவாரணம், தமிழ்நாடு வானிலை எச்சரிக்கை:
2:00 PM: பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்களை முதல்வர் நேரடியாக சந்தித்து ஆலோசித்திருக்க வேண்டாமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
12:50 PM: கஜ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சை மாவட்டங்களைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் குறைகளை கேட்டார். அவருடன் அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்மல்குமார் ஆகியோரும் சென்றனர்.
அப்போது குறைகளை கூறிய ஒரு பெண்மணி கண்ணீர் வடிக்க, உடனடியாக தனது கைகளால் கண்ணீரைத் துடைத்தார் ஆளுனர்.
12:35 PM: பேரிடர் காலங்களில் திமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட நிவாரண நிதியை விட தற்போது அதிகமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், பாதிப்புகளை முழுமையாக அறியவே ஹெலிகாப்டரில் சென்றதாகவும் டெல்லியில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கு பதில் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அப்போதைய விலைவாசி என்ன, இப்போதைய விலைவாசி என்ன?’ என கேள்வி எழுப்பினார்.
12:30 PM: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு நிதி கோரியிருக்கிறார்? என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
கஜா புயலில் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதியும், மின்சார வசதிகளுக்கு ரூ.7,077 கோடி, விவசாயம் - ரூ.625 கோடி, ஊரக வளர்ச்சி - ரூ.425 கோடி, மாநில நெடுஞ்சாலை - ரூ.328 கோடி, கால்நடை பராமரிப்பு - ரூ.150 கோடி, மீன்வளம் - ரூ.100 கோடி, பொதுப்பணித்துறை - ரூ.120 கோடி என மொத்தம் ரூ.14,910 கோடி நிவாரணம் கோரியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி
12:10 PM : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் அளித்த பேட்டியில், ‘வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக கூறினார். இதனால் கஜ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை மீண்டும் புயல் தாக்குமோ/ என இருந்த பீதி நீங்கியது.
வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் மிதமான மழையும் இருக்கும் என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறினார். விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள் பகுதியில் நீடிப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழியும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.