/tamil-ie/media/media_files/uploads/2018/06/a44-4.jpg)
பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் தர்மபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை - சேலம் பசுமை சாலை அமைப்பதற்காக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலத்தை கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்கியுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தால் தர்மபுரி தொகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள், கிராம மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்த பாமக எம்.பி. அன்புமணி ராமதாசுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து பாமக துணை பொது செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சட்ட ஒழுங்கிற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்து முடிந்துள்ளதாகவும், ஜூலை முதல் வாரத்தில் தர்மபுரி மாவட்ட அரூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது.
சேலம்-சென்னை பசுமை வழி சாலையால் பாதிக்கப்படும் மக்களை, அன்புமணி ராமதாஸ் சந்திக்க விடாமல் அரசு தடுப்பது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி பி.என்.பிரகாஷ், மனுவுக்கு ஜூலை 6 ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.