/tamil-ie/media/media_files/uploads/2018/08/s995.jpg)
பசுமை வழிச்சாலை திட்டத்தில் மனித உரிமை மீறல்
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவில், சென்னை - சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டத்திற்காக சேலம், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் அளவிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டதிற்கு எதிராக பல இடங்களில் மக்கள் போராடி வருகின்றனர். அதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார், மாரிமுத்து மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த மல்லிகா, சவுந்தர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து கடுமையாக தாக்கி உள்ளனர். இவர்களுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காவல் துறையினரால் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், இத்திட்டத்தினால் ஏற்படும் எதிர்மறை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதனையடுத்து மனு தொடர்பாக 4 வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.