சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இது தொடர்பாக சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை வினியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளதாகவும், டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisment
Advertisements
சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் புகார்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரிவித்தும், அதனை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்கள் டெலிவரிக்காக கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூடுதல் கட்டணம் கோருவதாக 2124 புகார்கள் பெறபட்டு உள்ளதாகவும், அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், புகார் மீது சம்மந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் எடுப்பதாகவும் சிலரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர் .
அப்போது நீதிபதிகள் அது தொடர்பான விபரங்களை ஏன் அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் இணையதளத்தில் வெளியிடவில்லை என்றும் என்றும் கேள்வி எழுப்பினர்.
டிப்ஸ் இல்லை என தெரிவித்தால் அடுத்த முறை சிலிண்டர் வினியோகம் செய்யும் போது வீடு பூட்டபட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலை உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் டிப்ஸ் கேட்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.