இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை, ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவி ஏற்றபின் சங்கத்தில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், சங்க நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடத்த வேண்டும், சங்கத்தின் பொதுக் குழுவை உடனடியாக நடத்தக் கோரியும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் தயாரிப்பாளர்கள் ஜெ. சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க நிதியில் முறைகேடு செய்திருப்பதாவும், பொதுகுழு உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் ஓய்வுதிய தொகையை 12 ஆயிரமாக உயர்த்தியுள்ளதாகவும், "இளையராஜா 75" நிகழ்ச்சி அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டிய பின் வழங்கப்படும் என விஷால் கூறும் நிலையில் இளையராஜாவுக்கு ஏன் 3.5 கோடி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
மேலும், தயாரிப்பாளர் சங்க நிதி குறித்து ஒரு ஆவணங்களை கூட நடிகர் விஷால் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தயாரிப்பாளர் சங்க தலைவர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் "இளையராஜா 75" நிகழ்ச்சியை ஏன் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும், 3500 பேர் இந்த நிகழ்ச்சியை காண வரவிருப்பதாகவும், மனுதாரர்கள் இந்த நிகழ்ச்சியை நிறுத்த நினைக்கிறார்கள் என இவர்களின் குற்றஞ்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவும் இவை அனைத்தும் தவறான குற்றச்சாட்டு என தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால் நிகழ்ச்சிக்கான ஒப்பந்த ஆவணங்களை மனுதாரர்களிடம் ஏன் வழங்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, இளையராஜா நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நாளை மறுநாளுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை நாளை மறுநாள் (ஜனவரி 30 ஆம் தேதி) தள்ளிவைத்தார்.