ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், “உங்களுடைய பணம், உங்களுடைய தாலியை அறுத்து, உங்கள் வீட்டில் இருக்கிற சாமான்களை அடமானம் வைத்து, டாஸ்மாக்கிலே குடித்து அந்த வருமானத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஸ்டாலினுக்கு கிடைக்கிறது” என பேசியிருந்தார்.
சி.வி சண்முகத்தின் இந்த பேச்சு, முதலமைச்சரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை தான். ஆனால், அதில் கண்ணியம் தேவை. பேசும்போது எச்சரிக்கையுடன், கண்ணியத்துடன் பேச வேண்டும். தேர்தலின் போது வாக்குறுதிகளை கொடுப்பது உலக அளவில் உள்ள நடைமுறை தான். வாக்குறுதிகளை நிறைவேற்றாதை சுட்டிக்காட்டலாம். மனுதாரர் சி்.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர். அவர் இவ்வாறு பேசக்கூடாது, பொறுப்போடு பேச வேண்டும். அந்த காலம் போல் இப்போது இல்லை, அடுத்த தலைமுறையினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், தலைமுறை மாறிவிட்டது, நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை,” என்று கூறினார்.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இதுபோல பேசுவது முதன்முறை அல்ல. மூன்று வழக்குகள் உள்ளன, அது சம்பந்தமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“