Advertisment

டெண்டர் முறைகேடு; எஸ்.பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

டெண்டர் முறைகேடு வழக்கு; முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு

author-image
WebDesk
New Update
sp-velumani-hc

டெண்டர் முறைகேடு வழக்கு; முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. அப்போதைய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தது.

இதையும் படியுங்கள்: ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

பின்னர் புகார் மீது நடவடிக்கை இல்லை எனக் கூறி, இதுசம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இந்த புகார் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு ஆண்டே ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டதால், எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு தான் எனவும், சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதில் இருந்து மாநில அரசை தடை செய்ய முடியாது என்பதால், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment