Advertisment

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவ மனைக்கு மாற்ற ஐகோர்ட் அனுமதி

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவ மனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி; விசாரணையில் வைக்கப்பட்ட வாதங்கள் என்ன?

author-image
WebDesk
New Update
Senthil Balajis wife has filed an additional petition in the Chennai High Court

செந்தில் பாலாஜி மனைவி கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவ மனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் ஜூன் 13 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: கரூர் வராஹி அம்மன் கோயிலில் தி.மு.க-வினர் சிறப்பு பூஜை

இந்தநிலையில் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலையில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மூத்த மருத்துவர்கள் 4 பேர் அடங்கிய குழு ஆய்வு செய்தது.

இந்தநிலையில், செந்தில் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதாகவும், அதற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், கைது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு நேற்று இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில், இன்று செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது மனைவி தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டன.

அப்போது, ”வழக்கமாக இந்த வழக்கில் ஜாமீன் கேட்பார்கள். ஆனால் தற்போது நாங்கள் ஜாமீன் கோரிக்கையை வலியுறுத்தவில்லை. தன் கணவரிடம் உடல்நிலையை முக்கியமாகப் பார்க்க வேண்டும். அதனால் உடனடியாக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன்பே, செந்தில் பாலாஜி கடந்த காலங்களில் காவேரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மூலம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருப்பதையடுத்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், அவரை உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்,” என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ”தமிழகத்திலேயே மிகச் சிறந்த மருத்துவமனை என்று சொல்லக்கூடிய ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, தற்போது வேறொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு என்ன காரணம்? மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியை ஆய்வு செய்த பிறகுதான் வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க முடியும்” என அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.  

இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவியின் கோரிக்கையை ஏற்று, நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அமர்வு, காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அப்போது, ஒருவருக்கு எங்கு சிகிச்சை அளிக்க வேண்டியது என்பதும், உரிய சிகிச்சை தர வேண்டியது என்பதும் குடும்பத்தாரின் கடமையாக இருக்கிறது. எனவே அவர்கள் விருப்பப்படும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீடிக்கும். நீதிமன்ற காவலில் இருந்தாலும், அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியை அவரை பரிசோதிக்கலாம். அரசு மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க இயலாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment