Advertisment

மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது; தொழிலதிபர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது; மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது – தொழிலதிபர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்துக்கள் முடக்கத்தையும் நீக்கி உத்தரவு

author-image
WebDesk
New Update
high court sand quarry

தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். 

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் ரொக்க பணம், 1,024 கிராம் தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன்.

இந்தநிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிம வள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், தொழிலதிபர்கள் மீது வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதம். மணல் குவாரிகள் அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் வராது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும், மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது எனவும் கூறி, தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், சொத்துக்கள் முடக்கத்தையும் நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sand Mines Madras High Court Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment