திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதற்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாகல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து வியாழக்கிழை (அக்டோபர் 10) உத்தரவிட்டது.
திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதற்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி இணை இயக்குனர் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பு மனுவில், “தனது படைப்புகள் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால் ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடியாது என்பதால், இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சரவணன் அமர்வு, ஜி.எஸ்.டி வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் முறையிட முடியும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டினர். மேலும், ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பதிலளிக்கலாம் எனவும், அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் எனவும் அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“