சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வளாகத்துக்குள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், தடை விதிக்கவேண்டும் என்று சரவணன் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முழு அமர்வு கொண்ட நீதிபதிகள் விசாரணை செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சக்திவேல் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கிறது. சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பின்னர் வளாகத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறவில்லை.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றங்களில் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடையே அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பிரச்சினைகள் இருந்தால், அதை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கப்பட்ட பின்னர், வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
எனவே, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கவேண்டும். தற்போது, வளாகத்தில் தடுப்புக்களை அமைத்து, இருபிரிவாக பிரித்து, ஒரு பக்கம் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பும், மறுபக்கம் மாநில போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகின்றன. ஐகோர்ட்டு முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பின் கீழ் வந்தால், இந்த தடுப்புகள் எல்லாம் அகற்றி விடலாம்.
எனவே, ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கும் விதமாக ஒரு திட்டத்தை தலைமை பதிவாளர் சக்திவேல் உருவாக்க வேண்டும். அந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்த முடிவை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.