டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், மதுபானங்கள் கொள்முதல் செய்தது மற்றும் பார்களுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம்சாட்டியது.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து, வேறு நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (08.04.2025) காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை சற்று நேரம் தள்ளிவைக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது, தமிழக அரசு சார்பில் மீண்டும் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் தடுப்பதாகவும், உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாகவும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, உச்ச நீதிமன்றம் செல்வதாகக் கூறியிருந்தால், இந்த வழக்கை இன்று விசாரிக்க பட்டியலிட்டிருக்க மாட்டோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த மனு பொதுமக்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவே வழக்குத் தொடரப்பட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும், எடுக்காவிட்டாலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதங்களை எடுத்துவைத்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே, டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். பின் அதன் அடிப்படையில் விசாரிக்கலாம்; தற்போதைய நிலையில் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியுள்ளார்.