சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி வி. தனபாலன், நீலாங்கரையில் வசித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல், நடை பயிற்சிக்கு சென்றபோது, திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, நிலைகுழைந்து கீழே சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
மறைந்த நீதிபதி வி. தனபாலன், 1953–ம் ஆண்டு ஜூன் 1–ந் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் செய்தூர் கிராமத்தில் பிறந்தவர். சீர்காழியில் பள்ளிப்படிப்பையும், மயிலாடுதுறையில் பட்டப் படிப்பையும், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசுசட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர், வக்கீலாக பணியாற்றி வந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 10–ந் தேதி வி.தனபாலன் நியமிக்கப்பட்டார். சுமார் 10 ஆண்டு காலமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 31ம் தேதி ஓய்வு பெற்றார்.