Advertisment

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர மறுத்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu, Government Transport Corporation Employees Strike, Chennai, Bus Strike

Tamilnadu, Government Transport Corporation Employees Strike, Chennai, Bus Strike

பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாடு ஸ்தம்பித்தது. வெளியூர் பயணத்தில் இருந்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டதால் அவதி அடைந்தனர்.

Advertisment

பஸ் ஊழியர்கள், தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலையில் திடீரென வேலை நிறுத்தத்தில் இறங்கினர். முன்னதாக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டனர்.

பஸ் ஊழியர்களுக்கு 2.57 மடங்கு காரணி அடிப்படையில் ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் அரசு தரப்பில் 2.44 மடங்கு காரணியால் பெருக்கி வழங்க சம்மதம் தெரிவித்தனர். எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வெளியேறின. ஆளும்கட்சியின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட இதர சங்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டன. இதைத் தொடர்ந்தே மாநிலம் முழுவதும் பெரும்பாலான பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

பஸ் ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக் காரணமாக வெளியூர் பஸ்களில் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். இதன் காரணமாக நேற்று (ஜனவரி 4) இரவு 7 மணிக்கு மேல் மாநிலம் முழுவதும் பஸ் பயணிகள் அடைந்த இன்னல்கள் சொல்லி மாளாது. இன்று 2-வது நாளாக பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இது தொடர்பாக LIVE UPDATES

மாலை 5.41 : போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகல் 3.42:போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகல் 3.30: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர மறுத்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரையும் செய்துள்ளது.

பகல் 3.15:போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணை தொடங்கியது.

பகல் 12.15 மணி : சென்னையில் நடந்த 14 தொழில் சங்கங்களின் ஆலோசனையில் போராட்டத்தை தொடர்வது என முடிவெடுத்து அறிவித்தனர். போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டி பேருந்துகளை இயக்க முயற்சி எடுப்பதாக, தொழிற்சங்க நிர்வாகி சவுந்திரராஜன் தெரிவித்தார்.

koyambedu bus கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள்

பகல் 11 .45 : பஸ் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் திமுக, இடதுசாரி தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னை தி.நகரில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், என்ன மாதிரியான பதில்களை தெரிவிப்பது என்பது குறித்தும் பேசப்படுகிறது.

பகல் 11.30 : போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பகல் 11.10 : பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்வீட்டில், ‘தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்.’ என குறிப்பிட்டார்.

பகல் 11.00 : போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்ள வேண்டும் என பத்திரிகையாளர் வாராகி முறையீடு செய்தார்.

இந்த பிரச்சனை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ‘மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்’ என நீதிபதிகள் கூறினர். பிற்பகலில் மனுவாக தாக்கல் செய்வதாகவும் அவசர வழக்காக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என வாராகி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ‘மனுவாக தாக்கல் செய்தால் மற்ற வழக்குகளை போல்தான் இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்கப்படும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

காலை 10.50 : தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 80 சதவீத பேருந்துகள் இயங்குவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

காலை 10.40 : போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால், வழக்கை ஏற்க மறுத்து நீதிமன்றம் முடித்து வைத்தது.

காலை 10.35 : இன்று பிறந்த நாள் கொண்டாடும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் நியாயம் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

காலை 10.30 : கோவை உள்ளிட்ட பெரு நகரங்கள் பலவற்றிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் பஸ்கள் இல்லாததால் பஸ் நிலையங்களில் காத்துக் கிடந்தனர்.

காலை 10.25 : திருவள்ளூர் அரசு பணிமனையிலுள்ள 65 பேருந்துகளில் இதுவரை 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. அதுவும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களால் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காலை 10.20 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 410 நகர, புறநகர் பேருந்துகளில் 90 சதவீதம் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.  தற்போது வரை 10 சதவிதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.

காலை 10.15 : பேருந்துகள் இயங்காததால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக எம்.பில் மற்றும் தனித் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

காலை 10.00 : சென்னையில் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தங்களது வேலை நிறுத்தம் தொடர்பாக சற்று நேரத்தில் கூடி ஆலோசனை நடத்த இருக்கின்றன.

Tamilnadu, Government Transport Corporation Employees Strike, Chennai, Bus Strike திருச்சி பஸ் நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு தொடர்பாக வைக்கப்பட்ட அறிவிப்பு

காலை 9.45 : மதுரை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பணிமனைகளின் வாசல்களில் ஊழியர்கள் தர்ணா நடத்தினர். ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் மூலமாக பஸ்களை இயக்க எதிர்ப்பு தெரிவித்து வாசலை மறித்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

காலை 9.30 : திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் போக்குவரத்து பணிமனை முன்பு தற்காலிக ஊழியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இதேபோல தற்காலிக ஊழியர்கள் மூலமாக பஸ்களை இயக்க அரசு தரப்பில் இருந்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காலை 9.00 : முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அண்ணா தொழிற்சங்கம் மூலமாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காலை 8.40 : அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் மூலமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து 30 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பல ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

காலை 8.00 : தமிழ்நாடு முழுவதும் சொற்ப அளவிலான பஸ்களே இன்று காலையில் இயக்கப்பட்டன. ‘போக்குவரத்து ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment