அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த பல்வேறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அமைச்சர் பெரியகருப்பன் செயல்பட்டதாக சிலர் குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர். அதன்பேரில், சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீசார், அமைச்சர் பெரியகருப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மற்றொரு புறம், கடந்த 2018-ஆம் ஆண்டில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க-வினர் அரியலூர் மாவட்ட பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமைச்சர் சிவசங்கர் மீது அரியலூர் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.
இதேபோல், கடந்த மக்களவை தேர்தலின் போது அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பரப்புரை மேற்கொண்டதாகக் கூறி, அமைச்சர் சிவசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையும் சேர்த்து அவர் மீது அரியலூர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இதைத் தொடர்ந்து, தங்கள் மீது நிலுவையில் இருக்கும் இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (மார்ச் 17) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.