/indian-express-tamil/media/media_files/2024/12/20/ljOTbZEEMuhX7Zj1Rmtg.jpg)
தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூர்த்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அ.தி.மு.க தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், புகார்தாரர் சூர்யமூர்த்தி ஆகியோர் டிசம்பர் 19-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும், டிசம்பர் 23-ம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாத நிலையில், தனது கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூர்த்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் மனு மீது முடிவெடுக்கும் என தெரிவித்ததாகவும், நீதிமன்றம் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்றும் கூறி, மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.