கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றவும், சட்டபூர்வ கட்டுமானங்கள் இடிக்கவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகளை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம், சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவுகள், காலாவதியாக நிலை ஏற்பட்டுள்ளதால், அந்த தடை உத்தரவுகளை நீட்டிக்க கோரி உயர் நீதிமன்றத்தை நாட முடியாத நிலை உள்ளதாக, நீதித்துறைக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இது சம்பந்தமாக தலைமை நீதிபதி ஏ பி சாஹி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, இந்த இடைக்கால உத்தரவுகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், ஆக்கிரமிப்பு அகற்றவும், இடத்தை காலி செய்யவும் கட்டிடங்கள் இடிக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தி இருக்காவிட்டால் ஏப்ரல் 30 வரை அந்த உத்தரவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இடைக்கால ஜாமீன் உத்தரவுகளையும், பரோல் உத்தரவுகளையும் நீட்டித்த நீதிபதிகள், தடை உத்தரவுகள் நீட்டிப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அரசும், சம்பந்தப்பட்டவர்களும் உரிய நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய் வசூல் செய்ய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக உடனடியாக வழக்குகள் தாக்கல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இதுசம்பந்தமாக தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை பெறவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.