நில மோசடி விசாரணை தொடர்பாக காவலர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்புவதாக யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில மோசடி விசாரணை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை யூடியுபர் சவுக்கு சங்கர் பரப்புவதாக குற்றம்சாட்டி, சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு ஆய்வாளர் சிவசுப்ரமணியன், கடந்த டிசம்பர் மாதம் புகாரளித்தார்.
இந்த புகாரின் பேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் ஆஜரான சவுக்கு சங்கர், விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறி, பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் தொடர்ச்சியாக, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஜாமின் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதனடிப்படையில், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.