/indian-express-tamil/media/media_files/2024/12/18/dzo0X50RrM4CnTCtkEEI.jpg)
விக்னேஷ் தரப்பில், தன் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக மருத்துவர் செயல்பட்டாதால் ஆத்திரத்தில் குத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை நவம்பர் 13-ம் தேதி பெருங்களத்தூரை சேர்ந்த இளைஞர் விக்னேஸ்வரன் (25) கத்தியால் குத்திய சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. டாக்டர் பாலாஜியைக் கத்தியால் குத்திய விக்னேஸ்வரன் என்கிற விக்னேஷை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி, பொது ஊழியரை தாக்கியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமானார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு நவம்பர் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, மக்கள், நோயாளிகள் அதிகம் கூடும் மருத்துவமனைக்கு ஆயுதம் எடுத்து வந்து, தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர், மருத்துவர்கள் தொழில்சார்ந்தவர்கள். அதில் பிரச்னை ஏற்பட்டால் உடனே தாக்குதல் நடத்த முடியுமா, இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விக்னேஷின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, விக்னேஷ் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது. பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விக்னேஷ் தரப்பில், தன் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக மருத்துவர் செயல்பட்டாதால் ஆத்திரத்தில் குத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். பின்னர், தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என விக்னேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.