ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க தடை – ஐகோர்ட்

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்; ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது மேல் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்; ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது மேல் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ED high court

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisment

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து இருவரது வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது? விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 17 ஆம் தேதி ஒத்திவைத்தார். 

இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment
Advertisements

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை பார்த்த நீதிபதிகள், இது வெறும் தகவல்களாக உள்ளது. ஆவணங்கள் எங்கே? வீட்டில் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதன்பின் கூடுதல் ஆவணங்கள் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த ஆவணங்களையும் பார்த்த நீதிபதிகள், அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்களுக்கும், வாதங்களுக்கும் பொருந்தவில்லை என்றனர். அதேபோல் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2014 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததாக வாதிட்டனர்.

இதன்பின் சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், சீலை அகற்றி, நோட்டீஸை எடுத்துவிடுகிறோம் என்று பதில் அளித்தனர். ஆனாலும் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்ப, இறுதியாக அமலாக்கத்துறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் கிடையாது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஜூன் 20) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகாஷ் பாஸ்கரன் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதுமட்டுமல்லாமல், கைப்பற்றிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Chennai High Court Tasmac

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: