கடந்த 2001 - 2006 அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 1.7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, ஓ.ராஜா, ரவீந்திரநாத் ஆகியோருக்கு எதிராக 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2009ஆம் ஆண்டு விசாரணையை முடித்து தேனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு இவ்வழக்கு சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று இந்த வழக்கில் இருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது.
இந்தநிலையில் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை 11 வருடங்களுக்கு மீண்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதனையடுத்து இந்த மறுஆய்வு வழக்கின் விசாரணைக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கின் தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இந்த வழக்குகளை விசாரிக்கிறார் என்றும், எனவே இதில் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் வந்தது. அப்போது ஓ.பிஎஸ் தரப்பில், “இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. மேல் விசாரணைக்குப் பிறகு வழக்கை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ததிலும் தவறு இல்லை. மேல் விசாரணையில் புதிய சாட்சிகள், ஆவணங்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அரசு தலைமை வழக்கறிஞர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே வழக்கை முடித்து வைக்கக் கோரிக்கை விடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை மனுதாக்கல் செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறையே முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்யும்போது, ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவிக்கக் காரணம் எதுவும் தேவையில்லை” என்று வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பில், “வழக்கை நீண்ட நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏன் நீண்ட காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்ற விசாரணைக்கு பொருந்தாது என்பது உங்களுக்குத் தெரியாதா? என காட்டமாக கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.