தமிழக அரசு 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் எழுத்தாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை ரத்து செய்த செயல், சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், “தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது. இந்த அரசு கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக செயல்படாது என நினைக்கிறேன்.” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற விசாரணையில், "இது துரதிஷ்டவசமானது. இலக்கியவாதிகளை இவ்வாறு நடத்தக் கூடாது" என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்குத் தொண்டாற்றிய எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு 'கனவு இல்லம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 'கல்மரம்' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 2022-ம் ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது.
ஆனால், ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, திலகவதிக்கு 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்து 2024-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திலகவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தனது மனுவில், "ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்தாலும், 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் வீடு ஒதுக்கீடு பெற தகுதி உண்டு என 2022-ம் ஆண்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதனை மாற்றி வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
திலகவதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "கவிஞர் மு. மேத்தா உள்ளிட்டோருக்கும் 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது" என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். "வீடு ஒதுக்கீடு செய்யும்படி யார் கேட்டது? அரசே வீடு ஒதுக்கீடு செய்துவிட்டு அதை ரத்து செய்தது சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல். இது துரதிஷ்டவசமானது. இலக்கியவாதிகளை இவ்வாறு நடத்தக் கூடாது" என்று கூறினார்.
மேலும், "தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது. இந்த அரசு கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக செயல்படாது என நினைக்கிறேன். திருத்தம் செய்வதாக இருந்தால் கூட அதை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது" எனக் கூறி, கவிஞர் மு. மேத்தாவுக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் ஜூலை 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி ஒத்திவைத்தார்.