ஐபிஎல் தொடரில் என்னென்ன கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் - பிசிசிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Chennai high court : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கஇந்திய கிரிகெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கஇந்திய கிரிகெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பலரை தாக்கியுள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்க கிரிக்கெட் போட்டியை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அலெக்ஸ் பென்சிகர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் உலகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதில் இதுவரை 3 ஆயிரத்து 497 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி, மனித இனத்துக்கு மிகப்பெரிய சவலாக திகழ்வதாகவும், இதற்கு மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் மனித இனத்துக்கு மிகப்பெரிய அழிவை இந்த வைரஸ் ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் : எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும இடங்களில் இந்த வைரஸ் எளிதாக பரவுகிறது. இதனால், பொதுநிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இத்தாலி நாட்டில் 1893-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஐ.எப்.எல். கால்பந்து விளையாட்டு போட்டியை காண பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. அதேபோல வருகிற ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 29-ந்தேதி மே 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் இந்த போட்டியை பார்வையிட உள்ளனர்.
இந்த போட்டியை காண கூடும் கூட்டத்தில் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதாக பரவி விடும். எனவே, வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்தியா கிரிக்கெட் வாரியம் தரப்பில், இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் போட்டி உட்பட பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைப்பதா, போட்டிகளின் போது மைதானத்திற்கு வரும் ரசிகர்களை தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா என்பது குறித்து பதிலளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.. இதனையடுத்து, ஐபிஎல் போட்டிகளின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil