தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் தெரியாது என்றால், அவரால் எப்படி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக தமிழக அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். இவரின் தந்தை கப்பல் படையில் பணியாற்றியதால், அவர் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்திருக்கிறார். இந்த நிலையில் தமிழ் மொழித் தேர்வில் ஜெயக்குமார் தேர்ச்சி பெறாததால், அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் தேனி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாததால் என்னை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி நடத்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தமிழர் என்பதால் பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மின்சார வாரியத்துறை மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், “மனுதாரரின் தந்தை கப்பற்படையில் பணிபுரிந்தவர். இடமாறுதல் காரணமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை. தற்போது தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். எனவே பணியில் சேர்க்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் தரப்பில், தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்? தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றிபெறாத சூழலில் எப்படி பணி நீட்டிப்பு செய்ய முடியும்? தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர்ந்தால் தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளதால், ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
அரசு ஊழியருக்கு தமிழ் தெரியாது என்றால், அவரால் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை என்றால், பொதுப் பணிக்கு ஏன் வருகிறீர்கள்? எந்த மாநிலத்தில் அரசுப் பணிபுரிந்தாலும், அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்த நீதிபதிகள், குறிப்பிட்ட கால அளவிற்குள் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழித் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.