/indian-express-tamil/media/media_files/2024/12/20/DnQzsUset18JIVRs8uvj.jpg)
தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்து, அவற்றை ஏலம் விட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த தனது வாகனம், கன்னியாகுமரி மாவட்டம் பாலுக்குழியில் கழிவுகளை கொட்டியதாகப் புகார் எழுந்ததாக குறிப்பிட்டார். இதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். அதை திருப்பி வழங்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் செந்தில்குமார், விதிமுறைகளை மீறி மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை அனுமதிக்க முடியாது என வாதிட்டார்.
விசாரணை மேற்கொண்ட நீதிபதி பி.புகழேந்தி, மருத்துவக் கழிவுகளை சட்டத்திற்கு உட்பட்டு நிர்வகிக்க வேண்டும் என்பதையும், 75 கி.மீ. தாண்டி கழிவுகளை எடுத்துச்செல்லக் கூடாது என்பதையும் நினைவூட்டினார். உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, இதுபோன்ற வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடலாம் எனவும் தெரிவித்தார்.
இதனை உறுதிப்படுத்த தமிழக தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர், மாநில உள்துறைச் செயலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.