குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். தஞ்சாவூர் மாவட்டம் ராஜாங்கநல்லூரைச் சேர்ந்தவர். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது;
”கடந்தாண்டு செப்டம்பர் 9-ல் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தேன். செப்டம்பர் 13 அன்று, மதியம் 02.15 மணியளவில், அசல் பதிவுகளை சரிபார்ப்பதற்கு சென்றேன். நான் நேரில் ஆஜராகி, அனைத்து அசல் சான்றிதழ்களையும் அளித்தேன். சரிபார்ப்பு முடிந்து விட்டது. திருச்சி மண்டல அதிகாரி எனது விண்ணப்பத்தை சரிபார்ப்புக்காக பந்தலூர் காவல் நிலையத்துக்கு அனுப்பினார்.
பந்தலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக என் மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனால், இதை காரணமாக வைத்து எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து வருகின்றனர். பாஸ்போர்ட் வழங்க முதல் தகவல் அறிக்கை ஒரு தடையல்ல என பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகள் உள்ளன. அதன் அடிப்படையில் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“