அதிகார வரம்பு இல்லை எனக் கூறி விபத்து இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது, விபத்தை விட அதிர்ச்சிகரமானது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர் துரைசாமி, கடந்த 2012 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது பிள்ளைகள் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்றம், மனுதாரர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், காப்பீட்டு நிறுவனம் மயிலாடுதுறையில் செயல்படுவதாலும் இந்த வழக்கை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி விமலா, சாலை விபத்தில் உயிரிழந்த துரைசாமியின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை காப்பீட்டு நிறுவனம் இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.
மேலும் அதிகார வரம்புகளை காரணம் காட்டி இழப்பீடு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கொள் காட்டிய நீதிபதி, அதிகார வரம்பு இல்லை என நாமக்கல் நீதிமன்றம் இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியை விட, அதிர்ச்சிகரமானது எனவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.