தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் இடம்பெறக்கூடாது என்றும், அரசு திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெறுவதை எதிர்த்து, அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01.08.2025)விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “அரசு திட்டத்தின் பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது. அதனால், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது” என உத்தரவிட்டது.
மேலும், அரசு நலத்திட்டம் தொடங்குவது குறித்தோ, அதை செயல்படுத்துவது குறித்தோ எந்த உத்தரவையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க அளித்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது எனவும் தெரிவித்தது.